புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் எனக் கூறி பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என FactSeeker உறுதிப்படுத்துகிறது
by Anonymous |
மே 14, 2026

ரதுகல ஆதிவாசித் தலைவர் தானிகல மகா பண்டாரலாகே சுதா வன்னியலாத்தோவின் (Sudha Wannila Aththo) திடீர் மரணத்தைத் தொடர்ந்து, புதிய தலைவராக பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும், சில பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இச்செய்தி குறித்து பரவலான விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்ததை அடுத்து, FactSeeker இது குறித்து ஆராய்ந்து பார்த்தது.
கடந்த 11ஆம் திகதி, ‘தினமின’ நாளிதழின் முதல் பக்கத்தில், “ரதுகலவின் புதிய ஆதிவாசித் தலைவர் ஒரு பல்கலைக்கழக மாணவர்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்ததுடன், அது அவர்களின் இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டிருந்தது. அதேவேளை, ‘அத தெரண’ (Ada Derana) செய்தி இணையதளத்தின் உத்தியோகபூர்வ செய்தி அட்டையை (News Alert Template) போலி முறையில் வடிவமைத்து, “ரதுகல சபரகமுவ பல்கலைக்கழக மாணவரை புதிய பழங்குடித் தலைவராக நியமித்தது” என்ற போலிப் பதிவொன்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

விசாரணை மற்றும் உண்மைத்தன்மை:
இது குறித்து ரதுகல ஆதிவாசி அபிவிருத்திச் சங்கத்தின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பு ஒன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில், மறைந்த முன்னாள் தலைவர் தனிகல மகா பண்டாரலாகே சுதா வன்னியலாத்தோவின் மூத்த மகனான தானிகல மகா பண்டாரலாகே நிஷாந்த குமாரவே ரதுகல ஆதிவாசிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், சில ஊடகங்கள் அவரது பெயர் ‘நிபுண’ என்றும், அவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என்றும் வெளியிட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, ரதுகல ஆதிவாசி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் டி.எம்.டி. திஸாநாயக்கவை FactSeeker தொடர்பு கொண்டு வினவியபோது, அவரும் இத்தகவலை உறுதிப்படுத்தினார். புதிய தலைவர் பல்கலைக்கழக மாணவர் அல்லர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மறுபுறம், ரதுகல ஆதிவாசிகளின் புதிய தலைவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என கடந்த 11ஆம் திகதி தாம் வெளியிட்ட செய்தி தவறானது என ‘தினமின’ நாளிதழ் மறுநாளான செவ்வாய்க்கிழமை (12ஆம் திகதி) திருத்தச் செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன், “ரத்துகல சபரகமுவ மாணவரை புதிய பழங்குடித் தலைவராக நியமித்தது” என்ற தலைப்பில் அத தெரன செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு, அந்த இணையதளத்தின் வடிவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஒரு போலிச் செய்தி என்பது மேலதிக ஆய்வில் தெரியவந்துள்ளது.

முடிவு:
எனவே, ரதுகல பழங்குடி இனத்தின் புதிய தலைவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.