இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் வீடியோ முற்றிலும் போலியானது
by Anonymous |
ஜூன் 17, 2026

பரப்பப்படும் செய்தி: தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டிக்குப் பிறகு இந்தியா A மற்றும் இலங்கை A அணி வீரர்களுக்கு இடையே வன்முறையான மோதலும், கைகலப்பும் ஏற்பட்டதாகக் கூறி ஒரு வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் தகவல்
கடந்த ஜூன் 15ஆம் திகதி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான சூப்பர் ஓவருடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மைதானத்தில் ஏற்பட்ட ஒரு மோதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.
குறிப்பாக, @Incognitocric என்ற எக்ஸ் (X) கணக்கிலிருந்து பகிரப்பட்ட ஒரு வீடியோ ( @Zoyakhan994, @dpsharm77898585 போன்ற கணக்குகளால் மீண்டும் பகிரப்பட்டுள்ளது), இரு நாட்டு வீரர்களும் மைதானத்தில் ஒருவரையொருவர் மிகக் கொடூரமாகத் தாக்கிக் கொள்வது போலக் காட்டுகிறது. அந்த வீடியோக்களின் கீழ், இளம் கிரிக்கெட் வீரர்கள் கட்டுப்பாட்டை இழந்து வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு
வைரலாகும் வீடியோக்களை அதிகாரப்பூர்வ போட்டிப் பதிவுகள் மற்றும் மைதானத்தில் இருந்த ஊடகவியலாளர்களின் சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பரிசோதித்தபோது, சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானவை (Fabricated) என்பது உறுதியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் பார்வைகளையும் (Views), ஈடுபாட்டையும் பெறுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காணொளியை அவதானிக்கையில் இயற்கைக்கு முரணான விதத்தில் பல காட்சிகளை அவதானிக்க முடிந்தது.
- சூரியவன்ஷி இரண்டு மூன்று உருவங்களாக காட்சியளிக்கின்றார்
வீரர் ஒருவர் சூரியவன்ஷியினால் தூக்கப்படுவது போன்று இருக்கும் காட்சி உண்மைக்கு மாறான விதமாக அமைந்துள்ளது - வீரர்கள் அனிமேஷன் போன்று காட்சியாளிக்கின்றாகள்
- இந்த காணொளி முழுமையாக போலியான ஒன்று என்பதை புகைப்படங்கள் ஊடாக தெளிவாக இங்கே காட்சிப்படுத்துகின்றோம்:

மைதானத்தில் உண்மையில் நடந்த நிகழ்வு இரு வீரர்களுக்கு இடையிலானது மட்டுமே, அதுவும் சில வினாடிகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.
மைதானத்தில் உண்மையில் நடந்தது என்ன?
போட்டியின் 50 ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றதால், போட்டி ‘சூப்பர் ஓவர்’ (Super Over) முறைக்குச் சென்றது. இதில் இலங்கை A அணி வெற்றி பெற்றது.
போட்டி முடிந்தவுடன், இலங்கை A அணியின் ஃபீல்டர் விஷேன் ஹலம்பகே, இந்தியாவின் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு மிக அருகில் சென்று, அவரை வம்பிழுக்கும் வகையில் கைகளை உயர்த்தி ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்.
தள்ளுமுள்ளு: தோல்வியின் ஏமாற்றத்தில் இருந்த சூர்யவன்ஷி, ஹலம்பகேயின் இந்தச் செயலால் கோபமடைந்து, அவரை நோக்கிச் சென்று பலமாகத் தள்ளினார்.
உடனடித் தலையீடு: இந்தத் தள்ளுமுள்ளு இரு அணிகளுக்கு இடையிலான பெரிய சண்டையாக மாறவில்லை. இந்தியாவின் சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் இலங்கையின் சிரேஷ்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் உடனடியாக இருவருக்கும் இடையே புகுந்து, அவர்களைப் பிரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு இரு அணி வீரர்களும் வழக்கம்போல பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர்.
காணொளி இங்கே :- https://x.com/FactseekerSL/status/2067191536610353575?s=20
அதிகாரப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கை: இந்தச் சம்பவம் கிரிக்கெட்டின் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால், போட்டி நடுவர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஷேன் ஹலம்பகே ஆகிய இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இரு வீரர்களுக்கும் அவர்களது போட்டிக் கட்டணத்திலிருந்து 50% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த வீரர்களோ அல்லது ஊழியர்களோ தண்டிக்கப்படவில்லை. இது, இச்சம்பவம் இரு நபர்களுக்குள் மட்டுமே நடந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.
முடிவு
இந்தியா A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையே பெரிய அளவிலான வன்முறை மோதல் வெடித்ததாகக் கூறும் வீடியோக்கள் முற்றிலும் தவறானவை. தம்புள்ளையில் நடந்த உண்மையான சம்பவம், இரு வீரர்களுக்கு இடையிலான ஒரு சிறிய வாக்குவாதம் மற்றும் ஒரு தள்ளுமுள்ளு மட்டுமே ஆகும். வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது போலவோ அல்லது ஆயுதங்களை வீசுவது போலவோ காட்டப்படும் வீடியோக்கள் அனைத்தும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை அல்லது போலியானவை ஆகும்.
