வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

வட மாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் மற்றும் தன்சல்களுக்கு ஆளுநர் நா. வேதநாயகன் தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் போலியானவை என FactSeeker உறுதிப்படுத்தியுள்ளது.
by Anonymous |
மே 27, 2026

வெசாக் கொண்டாட்டங்களை வடக்கில் முன்னெடுக்க வடக்கு ஆளுநர் நா. வேதநாயகன் தடை விதித்துள்ளதாக சமூக வலைதளங்களில் போலிப் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், இந்த செய்தியின் உண்மைத்தன்மையை FactSeeker ஆராய்ந்தது.
சமூக ஊடகப் பதிவுகள்:

பத்திரிகை செய்தித்தாள் வடிவமைப்பில் இந்த செய்தி பரப்பப்பட்டு வருகின்ற போதிலும், இவ்வாறான செய்தி எந்தவொரு பிரதான ஊடகத்திலும் அல்லது செய்தித்தாளிலும் பிரசுரிக்கப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
உண்மைச் சரிபார்ப்பு:
நடப்பு வெசாக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் தானசாலை (தன்சல் ) வழங்குவதற்கோ அல்லது பிற வெசாக் அலங்காரங்களைச் செய்வதற்கோ தடை விதித்து வடக்கு மாகாண ஆளுநர் ஏதேனும் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அது நாட்டின் பிரதான ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், எந்தவொரு நம்பகமான ஊடகமும் அத்தகைய செய்தியை வெளியிடவில்லை.
அதேபோல், சமூக வலைதளங்களில் இதனைப் பகிர்பவர்கள் யாரும் இது எந்த பத்திரிகையில் வெளியான செய்தி என்ற விபரத்தைக் குறிப்பிடவில்லை. இலங்கையில் வெளியாகும் எந்தவொரு பத்திரிகையின் எழுத்து நடையோ அல்லது வடிவமைப்பு சாயலோ இதில் இல்லாததால், இது போலியாக உருவாக்கப்பட்ட ஒரு பத்திரிகை வடிவமைப்பு என்பது தெளிவாகிறது.
இது குறித்து உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வடக்கு ஆளுநர் நா. வேதநாயகனை நேரடியாக தொடர்புகொண்டு FactSeeker வினவியபோது, அவர் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்பதை உறுதிப்படுத்தியதுடன், அவரினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கண்டன அறிக்கையையும் பகிர்ந்திருந்தார்.
வடக்கு ஆளுநர் அலுவலகத்தின் ஊடக அறிக்கை இங்கே :

அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் :-
“கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில், வட மாகாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகைக் காலத்தில் தானசாலை வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களைச் செய்வதற்கும் வட மாகாண ஆளுநரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தியானது முற்றுமுழுதாகப் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும். அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் ஆளுநர் செயலகத்தால் எடுக்கப்படவில்லை.
எமது சமூகங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவரும் இன, மத நல்லிணக்கத்தைச் சிதைத்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் தீய நோக்கத்துடனேயே சில தரப்பினரால் இவ்வாறான போலியான செய்திகள் திட்டமிடப்பட்டு புனையப்பட்டுப் பரப்பப்படுகின்றன. இதற்கு எதிராக ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து வினவியபோது, அவர்களும் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் ஆளுநரால் அவ்வாறான எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினர்.
அதேபோல், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இச்செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், வ டக்கு ஆளுநர் அவ்வாறான எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை என்றும் அவரும் தெளிவுபடுத்தினார்.
அமைச்சரை ஊடக சந்திப்பு காணொளி இங்கே :- https://www.youtube.com/watch?v=m7FPDlg4N34
முடிவு:
வெசாக் நிகழ்வின் போது வட மாகாணத்தில் தானசாலைகள் (தன்சல்) அல்லது பிற வெசாக் அலங்காரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி முற்றிலும் போலியானது என்றும், இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் குறுகிய நோக்கில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட ஒன்று என்றும் FactSeeker உறுதிப்படுத்துகின்றது.