உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

, " 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தில் ஆணையாளர் தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
by Anonymous |
ஜூன் 19, 2025

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கான வாக்களிப்பு கடந்த 16 ஆம் திகதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான (NPP) விராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளுடன் மேயராக தெரிவாக, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ரிசா ஸாரூக் 54 வாக்குகள் பெற்றார்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் எந்த ஒரு கட்சியும் சுயாதீன குழுக்களும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாததால், மேயர் மற்றும் துணை மேயர் தெரிவதற்கான அதிகாரம் மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு வழங்கப்பட்டது.
அதன் படி, கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்று இரகசிய வாக்கெடுப்பு மூலம் மேயர் தெரிவுசெய்யப்பட்டது. இந்த செயற்பாடுகள் அரசியல் தரப்புகளிடையே விவாதத்திற்கிடமாகின.
ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினர், ஆணையாளர் சட்டவிரோதமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியதையடுத்து தேசிய மக்கள் சக்தி தரப்பினர் அவர் உள்ளூராட்சி சட்ட விதிமுறைகளை பின்பற்றியதாக கூறினர்.
இந்நிலையில்,கடந்த ஜூன் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது தொடர்பான கருத்தை பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்ததை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
அதில் அவர், 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66ஈ (6) பிரிவினை மேற்கோள் காட்டி, ஆணையாளர் சட்டப்படி செயல்பட்டதாக தெரிவித்திருந்தார். குறிப்பாக, ஆணையாளரின் விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு நடைபெறலாம் என அச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், ஜூன் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர், அமைச்சர் சுனில் வட்டகல சட்டத்தை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக கூறியதால், இதுகுறித்து FactSeeker ஆராய்ந்தது.
66ஈ (6) பிரிவின் படி,
மாநகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்படும் போது, தேர்தல் முறையானது பகிரங்க வாக்களிப்பாக இருக்க வேண்டும்.
தலைமை தாங்கும் அலுவலர் சமூகமளித்துள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் கூப்பிட்டு, அவர் எவ்வாறு வாக்களிக்க விரும்புகிறாரென நேரடியாக கேட்டு அதற்கேற்ப வாக்கு பதிவு செய்ய வேண்டும்.
உறுப்பினர் ஒருவர் வாக்களிக்காமல் தவிர்க்கலாம்; அவ்வாறான சந்தர்ப்பத்தில் தலைமை தாங்கும் அலுவலர் அந்த உறுப்பினர் வாக்களிக்க தவிர்த்தமை குறித்து பதிவேற்றம் மேற்கொள்ள வேண்டும்.
இங்கு, “ஆணையாளரின் விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு நடைபெறலாம்” என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
ஆகவே, ” 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66ஈ (6) பிரிவில் ஆணையாளர் தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது” என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வெளியிட்ட கருத்து தவறானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.