வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்கள் தவறானதாகும்.
by Anonymous |
மே 27, 2025

இலங்கையர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கும் வகையிலான காணொளி ஒன்று சமீபத்திய நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. இக் காணொளியில், வெலிகம பகுதியில் உள்ள ஒரு அலைச்சறுக்கு பயிற்சியாளர் (surfing coach) இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுவதுடன், இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்பது குறித்தும், இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்தும் அறியத்தருமாறு factseekerக்கு கிடைக்கபெற்ற கோரிக்கைக்கு அமைய அதன் உண்மைத் தன்மையை FactSeeker ஆராய்ந்தது.
இக் காணொளி குறித்து ஆராய்ந்த போது, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பிரபல YouTuber ‘Lost Joey’ என்பவரே தாக்குதலுக்குள்ளானவர் என்பதையும் இச் சம்பவம் குறித்த முழு காணொளியை கடந்த மே மாதம் 24 ஆம் திகதி (24.05.2025) அவர் தனது YouTube பக்கத்தில் வெளியிட்டுள்ளமையையும் அறிய முடிந்தது.
அக் காணொளி அவரது YouTube பக்கத்தில் வெளியான பின்னரே, சமூக வலைதள பாவனையாளர்களுக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளதுடன், அது பல்வேறு கருத்துகளுடன் தவறாக பகிரப்படுவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனினும் ‘Lost Joey’ வெளியிட்டுள்ள காணொளியை முழுமையாக அவதானித்த போது, அந்தச் சுற்றுலாப் பயணி வெலிகம பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கின்ற காட்சிகளையும் பதிவேற்றியுள்ளதுடன், அக்காணொளியில் தெரியும் நாட்காட்டியை அவதானித்ததில், இது 2024 பெப்ரவரி மாதம் நடைபெற்ற சம்பவம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இந்நிலையில், இலங்கைப் பொலிஸார் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இச் சம்பவம் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்றதெனவும், தாக்குதலுக்குள்ளான சுற்றுலாப் பயணி அதே நாளில் வெலிகம பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்திருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது, இக் காணொளி சமீபத்தில் நிகழ்ந்ததுபோல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதால், மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக இலங்கை சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்துள்ளார். இது போன்று சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படும் காணொளிகளினால் இலங்கை சுற்றுலா துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இலங்கையர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை தாக்கும் வகையிலான காணொளி கடந்தாண்டு (2024) இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காணொளி என்பதையும் இது அண்மையில் இடம்பெறவில்லை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.