பொதுமக்களுக்கு இலங்கை பொலிசாரால் எச்சரிக்கப்பட்டதா?

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கும் செய்தி உண்மைக்கு புறம்பானது.
by Anonymous |
டிசம்பர் 22, 2023
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட ஒரு செய்தி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பகிரப்படுவதை Factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருவதால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறியத்தருமாறு Factseekerரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
” விலையுயர்ந்த கடிகாரங்களை அணியாதீர்கள், விலையுயர்ந்த மாலைகள், வளையல்கள், காதணிகள் அணியாதீர்கள், உங்கள் கைப்பைகள் தொடர்பில் கவனமாக இருங்கள். ஆண்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த செயின்கள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் விலை உயர்ந்த கையடக்க தொலைபேசிகளை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள். அந்நியர்களை காரில் அழைத்துச் செல்வதை தவிர்க்கவும். தேவைக்கு அதிகமான பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம். நீங்கள் பயணம் செய்யும் போது உங்கள் ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் வினவியபோது, இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார். இந்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்பட்ட இந்த அறிவிப்பு தவறானது என்பதை Factseeker உறுதிப்படுத்துகிறது.