கொழும்பு-புதுக்கடை துப்பாக்கி சூடு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள் கமாண்டோ சிப்பாய் அல்ல

இந்த சந்தேக நபர் இராணுவ பயிற்சியில் சேர்ந்து, அதிலிருந்து தப்பித்து, பின்னர் சட்டப்பூர்வமாக இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நபர் ஆவர்.
by Anonymous |
பிப்ரவரி 20, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள் கமாண்டோ சிப்பாய் என்றும் முன்னாள் விசேடப்படை வீரர் என்றும் சில பிரதான ஊடகங்களிலும் சமூகவலைதள பக்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்ததை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட இம்முரண்பாடான செய்திகளை அவதானித்த பின்னர் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பில் இலங்கை இராணுவத்திடம் FactSeeker வினவிய போது, இந்த நபர் கமாண்டோ படைப்பிரிவில் ஒரு சிப்பாயாக பயிற்சியில் சேர்ந்தவர் என்றும் பின்னர் அப் பயிற்சியின் போது அவர் தப்பிச் சென்றார் என்றும் தெரிவித்தனர். இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் போது அவர் மீண்டும் இராணுவ படைப்பிரிவில் சேர்ந்து, பின்னர் சட்டப்பூர்வமாக அதிலிருந்து விலகினார் என்று மேலும் தெரிவித்தனர்.
இதன் மூலம், இந்த சந்தேக நபர் இராணுவ பயிற்சியில் சேர்ந்து, அதிலிருந்து தப்பித்து, பின்னர் சட்டப்பூர்வமாக இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நபர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
ஆகவே, சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்டது போல், இந்த சந்தேக நபர் முன்னாள் கமாண்டோ சிப்பாய் அல்ல என்பதையும், அவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகின்றது.