உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

"உத்தியோகபூர்வ ஆவணங்களின்படி, உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸ் 17 வயதுடைய சிறுவன் என்பது உறுதியாகியுள்ளது. அவர் 19 வயது இளைஞன் என்ற பொலிஸாரின் அறிக்கை தவறானதாகும்."
by Anonymous |
பிப்ரவரி 16, 2026

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனான அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது குறித்து பிரதான ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த ‘வீரகேசரி’ நாளிதழில், “பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் சிறுவனா? இளைஞனா?” என்ற தலைப்பில் செய்தியொன்று பிரசுரமாகியிருந்தது. பொலிஸார் வெளியிட்ட அறிவித்தலில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் உள்ளதாகவும், சுட்டுக்கொல்லப்பட்டவர் 17 வயதுடைய சிறுவன் என்றும் அந்தச் செய்தியில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும், பொலிஸார் தமது உத்தியோகபூர்வ அறிக்கையில் உயிரிழந்தவரின் வயது 19 எனத் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த முரண்பாடு குறித்து FactSeeker ஆய்வு செய்தது. அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிவிப்பிற்கும், மறுநாள் 11ஆம் திகதி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பிற்கும் இடையில் மரணித்தவரின் வயது குறித்து இருவேறு தகவல்கள் வழங்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்களில் 17 வயது சிறுவன் எனச் சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகின. இவை 10ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட ஆரம்பகட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிரசுரிக்கப்பட்டிருந்தன.

ஆனால், இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவிடம் FactSeeker வினவியபோது, மரணித்தவர் 19 வயதுடைய இளைஞன் என்றே அவர்கள் மீண்டும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் உறவினர்களைத் தொடர்புகொண்டு அவரது பிறப்புச் சான்றிதழைப் பரிசோதித்ததில், அவர் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி பிறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி, அவர் சுட்டுக்கொல்லப்படும் போது 17 வயது 3 மாதங்கள் உடைய ஒரு சிறுவன் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகின்றது.

அதேபோல், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்தபோது, சட்ட வைத்திய அதிகாரி ருத்ரபசுபதி மயோதரன், நீதவான் எம்.என்.என். உசேனுக்கு அனுப்பிய அறிக்கையிலும் உயிரிழந்தவருக்கு 17 வயது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

அயூப்ராஜ் அருள் பயாஸின் இறுதி ஊர்வலத்தின் போது வைக்கப்பட்டிருந்த மரண அறிவித்தல் பதாகையிலும் அவரது பிறப்பு மற்றும் இறப்புத் திகதிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

முடிவு:
இந்த மரணம் குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கைகளில் வயது தொடர்பான பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. பொலிஸார் இறுதியாக உறுதிப்படுத்திய ’19 வயது’ என்பது முற்றிலும் தவறானதாகும். பிறப்புச் சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸ் 17 வயதுடைய சிறுவன் என்பது உறுதி செய்யப்படுகின்றது.
