இஸ்ரேலுக்கு ஆதரவாக இலங்கையில் இடம்பெற்ற பேரணியானது கடந்த 2015 இடம்பெற்றதாகும்.

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மட்டக்களப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நடைபெற்றதாகக் கூறப்படும் பேரணியைக் காணொளியொன்று தற்போது சமூகவலைதளங்களில் தவறான கூற்றுகளுடன் பகிரப்படுகின்றது.
by Anonymous |
ஏப்ரல் 18, 2025

” முஸ்லிம்களை இந்த உலகத்தில் இருந்தே துடைத்தழிக்கின்ற நோக்கத்தை இலக்காகக் கொண்டு தனது நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக, இலங்கையில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு நகரில் இப்படி ஒரு பாரிய ஊர்வலமா? இந்த ஊர்வலத்துக்கு அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், போலீஸ் பாதுகாப்பும் வழங்கியதன் மூலம் AKD அரசு, இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு சொல்கின்ற மறைமுகமான செய்தி என்ன? முஸ்லிம் மக்கள் இப்போதாவது விளங்கிக் கொள்வார்களா? விழித்தெழுவார்களா? ” என்ற கருத்துக்களை உள்ளடக்கிய காணொளியொன்றுடனான பதிவொன்று facebook பக்கத்தில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
Link :- https://web.facebook.com/watch/?mibextid=wwXIfr&v=1253131142673116
இஸ்ரேல் நாட்டுக் கொடியுடன் ஆதரவு பேரணியொன்று இலங்கையில் இடம்பெற்றிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிந்த போதிலும் அது அண்மையில் (ஜனாதிபதி அநுரகுமார திசாநாயவின் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்துக்குள்) இடம்பெற்றதாக பிரதான ஊடகங்களிலோ அல்லது இது சார்ந்த செய்திகளை வெளியிடும் உத்தியோகபூர்வ தளங்களிலோ சமூக ஊடகக் கணக்குகளிலோ அவதானிக்க முடியவில்லை.
ஆகவே இது குறித்து உண்மைகளை உறுதிப்படுத்திக்கொள்ள, காணொளியின் ஒரு புகைப்படத்தை google reverse image search மூலமாக ஆராய்ந்து பார்த்ததில், இப்பேரணியானது கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய ரணில்- மைத்திரி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பேரணி என்பதை கண்டறிய முடிந்தது.
Link :- https://www.youtube.com/watch?v=n26JX4PKoSA
முடிவு :- சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த பேரணியின் காணொளியொன்றையே தற்போது, ஜனாதிபதி அநுரகுமார அரசாங்கத்தினால் பாதுகாப்பு வழங்கி நடத்தப்பட்ட பேரணி என முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.