இலங்கை பத்திரிகை பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினராகவே செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவையாகும்.
by Anonymous |
ஏப்ரல் 3, 2025

“இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக செந்தில்வேலவர் நியமனம்” என்ற தலைப்பில் செய்திகள் பிரதான ஊடகங்களிலும் அதேபோல் இணையதளங்களிலும் பிரசுரமாகியுள்ளதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
தினகரன்,வீரகேசரி, தமிழ் மிரர் போன்ற பிரதான செய்தித்தாள்களிலும், அதேபோல் புதிய குரல் மற்றும் UTV ஆகிய செய்தித்தளங்களிலும் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளன. எனினும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் எந்தவொரு சபை உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
எனினும் இந்த செய்தி குறித்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆங்கிலத்தில் sri lanka press council எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான தமிழாக்கமானது இலங்கை பத்திரிகை பேரவை என்றே அர்த்தப்படும். எனினும் இலங்கை பத்திரிகை பேரவை என்பதற்கு பதிலாக “இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்” என தவறாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது எந்தவித அரச தலையீடுகளும் இல்லாது பணியாற்றும் சுயாதீன நிறுவனமாகும்.
இலங்கை பத்திரிகை பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தினகரன் மற்றும் தினகரன் – வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஊடகத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த மார்ச் 26 ஆம் திகதி வெகுசன ஊடக அமைச்சில் வழங்கியுள்ளார்.
ஆகவே, இலங்கை பத்திரிகை பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவே செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.