அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

அகமதாபாத் விபத்து நடைபெறுவதற்கு முன் அவ்விமானத்தில் பயணித்தவர்கள் எடுத்ததாக பகிரப்படும் காணொளிகள், தற்போதைய அகமதாபாத் விமான விபத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல.
by Anonymous |
ஜூன் 13, 2025

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் எயார் இந்தியா (Air India) விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று (12) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த விபத்து நடைபெறுவதற்கு முன் அவ்விமானத்தில் பயணித்தவர்கள் எடுத்ததாக கூறப்படும் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில், அவற்றை FactSeeker அவதானித்தது.
“குஜராத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்… பயணிகள் எடுத்த வீடியோ – மனதை உலுக்கும் காட்சி” என்ற தலைப்புடன் ஒரு காணொளியும், “பயணிகளின் இறுதி நொடிகள்” என்ற தலைப்புடன் மற்றொரு காணொளியும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இக்காணொளிகள் அதிகமாக பகிரப்பட்டு வருவதால், அவற்றின் உண்மைத் தன்மையை FactSeeker ஆராய்ந்தது.
“குஜராத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்… பயணிகள் எடுத்த வீடியோ – மனதை உலுக்கும் காட்சி” என்ற தலைப்புடன் பகிரப்படும் காணொளியை Google Lens மூலம் ஆராய்ந்த போது, அது 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மற்றொரு விமான விபத்துடன் தொடர்புடையது என்பது தெரியவந்தது. குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி நேபாளத்தின் போக்ரா நகரில் ஏற்பட்ட விமான விபத்துக்கு முன் அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் வெளியிட்ட Facebook நேரலையின் காணொளி என்பதை உறுதிபடுத்த முடிந்தது. இது குறித்து வெளியாகிய சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் செய்திகளையும் அவதானிக்க முடிந்தது.
- https://tinyurl.com/tjjusx5d
- https://www.aljazeera.com/news/2023/1/18/long-wait-for-family-of-indian-whose-nepal-crash-video-went-viral
மேலும், “பயணிகளின் இறுதி நொடிகள்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட காணொளியை ஆராய்ந்தபோது, அது பாகிஸ்தானில் இடம்பெற்ற ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்தது.
குறிப்பாக, இது கடந்த மே 24 ஆம் திகதி கராச்சியிலிருந்து லாகூர் நோக்கிப் புறப்பட்ட விமானம் கடுமையான புயலால் பாதிக்கப்பட்டபோது, அதில் பயணித்த ஒருவர் பதிவு செய்த காணொளி ஆகும். அந்த விமானம் கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்டபோதும், எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இது குறித்து வெளியாகிய செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- https://tinyurl.com/cum5w8xy
- https://timesofindia.indiatimes.com/world/pakistan/watch-panic-on-board-as-pakistani-plane-aborts-landing-amid-violent-sandstorm/articleshow/121405389.cms
கிடைத்த ஆதாரங்களின் படி, முதல் காணொளி 2023 ஆம் ஆண்டு நேபாளத்தின் போக்ரா நகரில் நிகழ்ந்த விமான விபத்தின்போது பதிவு செய்யப்பட்டது என்பதையும் இரண்டாவது காணொளி 2025 மே மாதம் பாகிஸ்தானில் கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி புறப்பட்ட விமானம் கடுமையான புயலால் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு பயணியால் எடுக்கப்பட்ட காணொளி என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.
ஆகவே, அகமதாபாத்தில் நேற்று இடம்பெற்ற விபத்திற்கு முன்னர் விமானத்தில் பயணித்தவர்கள் எடுத்ததாக கூறப்படும் இக்காணொளிகள், தற்போதைய அகமதாபாத் விமான விபத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.