ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார் என பகிரப்படும் போலிச்செய்தி

"ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார்" எனக் கூறும் செய்திகள் பொய்யானவை என ஹயேஷிகாவின் தரப்பினர் FactSeeker-க்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
by Anonymous |
மே 19, 2025

“டீச்சர் அம்மா” என அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ ரூ.25,000க்கு தன்னுடைய சிலைகளை விற்பனை செய்கிறார் என்ற தலைப்புடன் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, பதிவுகள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
“டீச்சர் அம்மா சிலை உருவாக்கினார் – ஒன்றை ரூ.25,000க்கு விற்றார்” என்ற தலைப்புடன் காணப்படும் அந்தச் செய்தி, லங்காதீப பத்திரிகையின் வடிவமைப்பில் காணப்பட்டிருந்ததால், லங்காதீப பத்திரிகையில் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என FactSeeker ஆராய்ந்தது. எனினும், அதன் முதன்மைப் பக்கம் மற்றும் உள்ளடக்கப் பக்கங்களில் இவ்வாறு எந்த செய்தியும் காணப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் குழுவிடம் வினவியபோது, இச்செய்தி 2025 மே 12 அன்று அவர்கள் பிராந்திய பதிப்பில் மட்டுமே வெளியிடப்பட்டதாகவும், அச் செய்தி மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினர்.
இது குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி புத்திக மனதுங்கவிடம் FactSeeker வினவிய போது, இந்தச் செய்தியில் கூறப்படுகின்ற சிலை விற்பனை சம்பந்தமாக தங்களுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் ஹயேஷிகா பெர்னாண்டோவின் ஊடகப் பேச்சாளர் அனில் பிரசங்கவிடம் FactSeeker வினவிய போது, இது பொய்யானதொரு தகவல் என தெரிவித்தார். இத்தகைய சிலையொன்றைப் பற்றிய தகவலை அவர்கள் சமூக ஊடகப் பதிவுகள் மூலமாக மட்டுமே அறிந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஹயேஷிகா பெர்னாண்டோ கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் (40:43), ரூ.25,000க்கு சிலைகளை விற்பனை செய்கிறார் என்ற தகவல் தவறானது எனவும், அந்த செய்தி பொய்யானது எனவும் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில், தங்களை Entertainment Website என வகைப்படுத்தும் “சமரகோன் பூஜை பொருள் உற்பத்தியாளர்கள்” எனும் முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி வெளியிட்ட லங்காதீப செய்தியின் படத்தை அடிப்படையாகக் கொண்டு “ஹயேஷிகா குருதேவி சிலை” எனும் தலைப்பில் ஒரு விளம்பர பதிவை வெளியிட்டுள்ளது. பின்னர், இதை அடிப்படையாக வைத்து மதங்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இன்னும் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், “சமரகோன் பூஜைப் பொருள் உற்பத்தியாளர்கள்” என்ற பெயரில் இயங்கும் அந்த முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, எந்த நம்பகமான தகவலையும் பெற முடியவில்லை.
ஆகவே, ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார் என வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.