வரவு-செலவு திட்டம் குறித்து புபுதுவின் தவறான விளக்கமும் ஹிருவின் தவறான செய்தித்தலைப்பும்

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
by Anonymous |
பிப்ரவரி 17, 2025

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்திக்காக 300 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ள தற்போதைய அரசாங்கம், கல்விக்காக 65 பில்லியன் ரூபாய்களை மட்டுமே ஒதுக்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளதாக இன்று (17-02-2025) ஹிரு தொலைக்காட்சியின் நண்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இன்று (17) அரசாங்கத்தின் வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி முன்வைத்த புள்ளிவிவரங்களுக்கும் ஹிரு தொலைக்காட்சியின் நண்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையில் முரண்பாடு இருந்ததால், FactSeeker அந்த புள்ளிவிவரங்களை உண்மைச் சரிபார்ப்பு செய்ய தீர்மானித்தது. அதன்படி, அந்தச் செய்தித் தொகுப்பை factseeker ஆராய்ந்தது.
அதன்போது புபுது ஜயகொட கூறுகையில், தற்போதைய அரசாங்கம் 2025 “ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில்” நெடுஞ்சாலைகள் அமைச்சின் மூலதனச் செலவினங்களுக்காக ரூ. 389 பில்லியனை ஒதுக்கியுள்ள நிலையில்,10,000 பாடசாலைகள்,18 பல்கலைக்கழகங்கள், நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் விவசாயக் கல்லூரிகளைக் கொண்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ரூ.65 பில்லியன் மூலதனச் செலவு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிட்டார்.
ஆகவே, ஹிரு தொலைக்காட்சி செய்தி அறிக்கையின் அறிமுகத்திலும் தலைப்பிலும் புபுது ஜயகொடவின் கூற்று தவறாக பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை அவதானிக்க முடிந்தது.
எனினும், புபுது ஜயகொடவின் உரையை முழுமையாக அவதானித்ததில்,
“இந்த ஒதுக்கீட்டு சட்டமூலத்திதிற்கு அமைய, 2025 ஆம் ஆண்டிற்கான வர்த்தக மற்றும் வணிக அமைச்சகத்திற்கு 2.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு துறைக்கு 0.3 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சகத்திற்கு 8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தசாசன அமைச்சகத்திற்கு 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது…
…இலங்கையில் உள்ள 2.2 மில்லியன் மக்களின் சுகாதாரத்திற்காக 95 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தைப் போலவே இலங்கையில் சாலைகள் அமைப்பதற்கு இந்த அரசாங்கமும் முன்னுரிமை வழங்கியுள்ளது. ஆனால் அடக்குமுறிக்கு அதிகபட்ச வளங்களை ஒதுக்கியுள்ளனர், 2024 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக 423 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த முறை அது 442ஆக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் முன்வைத்த இந்த தரவுகள் குறித்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அவதானித்த போது, புபுது ஜயகோட அவர்கள் சில புள்ளிவிவரங்களை முன்வைக்கும்போது, மூலதனச் செலவுகள் மற்றும் மீண்டுவரும் செலவீனங்கள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்,அதே நேரத்தில் சில தரவுகளை தனித்தனியாக முன்வைத்துள்ளார்.
அதன்படி, புபுது ஜயகொட வர்த்தக மற்றும் வணிக அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையாக மீண்டுவரும் செலவீனங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். இது 2.1 பில்லியன் ரூபாய் ஆகும். இதன் மூலதனச் செலவு ரூ.0.4 பில்லியன் ஆகும். இதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.2.5 பில்லியன் ஆகும்.
கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக மட்டும் ரூ. 8.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ரூ. 4.8 பில்லியனை மீண்டுவரும் செலவீனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அங்கு மூலதனச் செலவை மட்டுமே குறிப்பிடுகின்றார்.
புத்தசாசன அமைச்சுக்கு ரூ. 13 பில்லியன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ரூ. 5 பில்லியன் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ. 442 பில்லியன் என அவர் கூறும் தரவு, அந்தச் செலவினத் தலைப்புகளில் தொடர்ச்சியான செலவு மற்றும் மூலதனச் செலவினங்களின் கலவையாகச் சரியாக உள்ளது.
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் மூலதனச் செலவாக 95.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டுவரும் செலவீனமாக 413 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புபுது ஜயகொட இங்கு மூலதனச் செலவினங்களை மட்டுமே குறிப்பிடுகின்றார்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் மூலதனச் செலவினங்களுக்காக ரூ.65 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும், இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வரவு செலவுத் திட்ட உரை மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஆவணம் குறித்து Factseeker கவனம் செலுத்தியது.
ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 421 பில்லியன் ரூபாவாகும். இதன் கீழ், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரின் செலவினத் தலைப்பின் கீழ், வளர்ச்சி நடவடிக்கைகளுக்கான மூலதனச் செலவினமாக ரூ.389 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுக்கு ரூ.619 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மூலதனச் செலவினங்களுக்காக ரூ.98.9 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மீண்டுவரும் செலவினங்களுக்காக ரூ.520.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு பட்ஜெட்டில் ரூ.483 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் ரூ.433 பில்லியன் அதன் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக மொத்தம் ரூ.355.74 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் ரூ.347.20 பில்லியன் மூலதனச் செலவாகவும் ரூ.8.49 பில்லியன் மீண்டுவரும் செலவாகவும் அடங்கும்.
அதன்படி, ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் உள்ள செலவினத் தலைப்புகள் தொடர்பான புபுது ஜயகோடாவின் விளக்கமானது முழுமையாக உண்மையான அறிக்கை இல்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.