நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்தப் படம் உண்மையானது அல்ல
by Anonymous |
பிப்ரவரி 28, 2026

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் (King Charles III) மன்னரைச் சந்தித்ததாகக் கூறப்படும் புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இருப்பினும்,’FactSeeker’ மேற்கொண்ட ஆய்வின்படி, பரவலாகப் பகிரப்படும் இந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திருத்தப்பட்ட ஒன்று என்பதும், இது ஒரு உண்மையான புகைப்படம் அல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னணி
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கட்டிடத்தின் முன்பாக நாமல் ராஜபக்ஷவும், மூன்றாம் சார்லஸ் மன்னரும் கைகுலுக்குவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. பல சமூக வலைதளப் பயனர்கள் இது ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பின் போது எடுக்கப்பட்ட உண்மையான தருணம் எனக் கருதி, பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், நம்பகமான ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, வைரலாகும் இந்தப் புகைப்படம் அந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்துடன் ஒத்துப்போகவில்லை என்பது கண்டறியப்பட்டது.

உண்மை என்ன?
குறித்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் ‘Daily Mirror’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படமானது சந்திப்பின் உண்மையான சூழலையும் பின்னணியையும் தெளிவாகக் காட்டுகிறது (ஆதாரம்: Daily Mirror). https://www.dailymirror.lk/print/caption-story/Namal-meets-Lord-Michael-Naseby/110-333851
அசல் புகைப்படமானது தற்போது இணையத்தில் பரப்பப்படும் திருத்தப்பட்டப் பதிப்போடு எவ்விதத்திலும் பொருந்தவில்லை. உண்மையில் அவர் சந்தித்தது பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த மைக்கேல் நேஸ்பி பிரபு (Lord Michael Naseby) அவர்களை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த பதிவொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ தேர்தல் பிரசார ஊடகப் பக்கமும் இது தொடர்பாகத் தெளிவுபடுத்தியுள்ளது. வைரலாகும் அந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு போலியான படம் என்றும், அது தவறான தகவல் என்றும் அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர் (ஆதாரம்: Facebook Statement).
முடிவு
மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில், வைரலாகும் அந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட (AI-generated) ஒரு போலியான படம் என்றும், அது உண்மையானது எனச் சித்தரிப்பது முற்றிலும் தவறானது என்றும் ‘FactSeeker’ உறுதிப்படுத்துகிறது.
