தண்ணீரில் ஓடக்கூடிய கார் ஒன்றை பாடசாலை மாணவர் ஒருவர் உருவாக்கியதாக பகிரப்படும் போலிச்செய்தி

இரத்தினபுரி கல்வி வலயத்தில் "ஒகபத்தன கல்லூரி" என்ற பெயரில் எந்தப் பாடசாலையும் இல்லை என இரத்தினபுரி வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்தது.
by Anonymous |
ஏப்ரல் 2, 2025

இலங்கையைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தண்ணீரில் ஓடக்கூடிய கார் ஒன்றை உருவாக்கியதாக “லங்காதீப” செய்தித்தாளில் கடந்த மார்ச் 29 ஆம் திகதி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இக் கார் இரத்தினபுரியில் உள்ள “ஒகபத்தன” கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரால் தயாரிக்கப்பட்டது என்றும், அது இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச் செய்தியில் பாடசாலையின் பெயர் “ஒகபத்தன” என குறிப்பிடப்பட்டிருப்பதால் இது குறித்து சமூகவலைதளங்களில் பல கேலி பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
இதன் உண்மைத்தன்மை குறித்து FactSeeker ஆராய்ந்ததில், இக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர் குறித்து எந்தவொரு தகவல்களும் குறிப்பிடப்படவில்லை மேலும் இரத்தினபுரி பகுதியில் இதுபோன்ற எந்த சம்பவமும் பதிவாகவில்லை.
இரத்தினபுரி கல்வி வலயத்தில் “ஒகபத்தன கல்லூரி” என்ற பாடசாலை உள்ளதா என இரத்தினபுரி வலயக் கல்வி அலுவலகத்திடம் FactSeeker வினவிய போது, ஒகபத்தன என்ற பெயரில் எந்த பாடசாலையும் இல்லை என தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பில் லங்காதீப நிருவாகத்திடம் வினவிய போது, இச் செய்தி தவாறான செய்தி என்றும் இது தொடர்பான திருத்தம் கடந்த மார்ச் 31 ஆம் திகதி லங்காதீப செய்தித்தாளில் வெளியாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆகவே, இரத்தினபுரி பகுதியில் “ஒகபத்தன” என்ற பெயரில் எந்த பாடசாலையும் இல்லை என்பதையும் இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தண்ணீரில் ஓடக்கூடிய காரை உருவாக்கியதாக “லங்காதீப” செய்தித்தாளில் வெளியாகிய செய்தி தவறான செய்தி என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது