ஜனாதிபதி அநுர தலதா பெரஹெராவை நிறுத்துவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டதாக போலிச்செய்தி

ஸ்ரீ தலதா மாளிகையின் பார்வையாளர்களின் குறிப்பேட்டில் விசேட நினைவுக் குறிப்பொன்றை எழுதுவதும் ஒரு பாரம்பரியமாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
by Anonymous |
செப்டம்பர் 24, 2024

“புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலதா பெரஹெராவை நிறுத்துவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்” என்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்ட அநுரகுமார திஸாநாயக்க நேற்று (23) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்ட செய்திகள் வெளியானதையடுத்து இவ்வாறான பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பில் பிரதான ஊடகங்களில் வெளியிட்டிருந்த செய்திகளை அவதானிக்க முடிந்ததுடன் அச்செய்திகளை ஆராய்ந்ததில் சமூக வலைதள பதிவுகளில் கூறுவது போன்ற நிகழ்வுகள் ஏதும் இடம்பெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
TV Derana : https://youtu.be/rcwM3AscvRE?t=53
Hiru TV : https://youtu.be/Ofe5JJsGZUE?t=16
இலங்கையில் அரச தலைவர்கள் பதவியேற்றவுடன் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடு செய்வதும் வழிபட்டதன் பின்னர் ஸ்ரீ தலதா மாளிகையின் பார்வையாளர்களின் குறிப்பேட்டில் விசேட நினைவுக் குறிப்பொன்றை எழுதுவதும் ஒரு பாரம்பரியமாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் பதவியேற்ற பின்னர் தலதா மாளிகையில் நினைவுக் குறிப்புகளை எழுதிச் சென்ற செய்திகளையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://www.facebook.com/share/nt597VQJfuNhAxwo/
https://sinhala.news.lk/news/photo-story/item/35817-2019-11-20-10-01-19
ஆகவே, “புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலதா பெரஹெராவை நிறுத்துவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்” என சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை facrseeker உறுதிப்படுத்துகிறது.