ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் பெயரில் பகிரப்படும் போலிக்கடிதம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதம் போலியானது என வஜிர அபேவர்தன தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
by Anonymous |
மே 22, 2025

கொழும்பு மாநகர சபையின் மேயராக சாகல ரத்னாயக்க தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும், இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பிற உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
அக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
“பல்வேறு உரையாடல் சுற்றுகளுக்கு பின்னர், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், பெரும்பான்மை பெறாத உள்ளூராட்சி சபைகளில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, எஸ்.ஜே.பி மற்றும் ஐ.தே.க தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.இதன் ஆரம்ப கட்டமாக, கொழும்பு மாநகர சபை மேயராக சாகல ரத்னாயக்கவை நியமிப்பதற்கு சஜித் பிரேமதாச் ஒப்புதல் வழங்கினார். பின்னர், அவருக்காக பணியாற்றியவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பின், அவரை மேயராக நியமிக்க இறுதியான ஒப்புதல் வழங்கப்பட்டது”
இது குறித்து FactSeeker ஆராய்ந்த போது, இத்தகைய எந்தவொரு கடிதமும் ஐக்கிய தேசிய கட்சியினால் அல்லது வஜிர அபேவர்தனவால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், “கொழும்பு மாநகர சபையின் மேயராக சாகல ரத்னாயக்க தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும், இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பிற உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதம் ” போலியானது என வஜிர அபேவர்தன தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதேவேளை, “கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியை ஏற்க நான் தயாராக உள்ளேன்” என்று சாகல ரத்னாயக்க கூறியுள்ளதாக புகைப்படத்துடனான பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது. ஆனால் இப் புகைப்படமும் சாகல ரத்னாயக்க அல்லது ஐக்கிய தேசிய கட்சியினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
மேலும், இப் புகைப்படத்தை Google Reverse Image மூலம் ஆராய்ந்த போது, இதே பின்னணியில் வேறொரு பதிவுடன் உருவாக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை அவதானிக்க முடிந்தது. இதன் மூலம், இப்புகைப்படம் திரிபுப்படுத்தபட்ட போலி புகைப்படம் என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
இது குறித்து சாகல ரத்னாயக்கவிடம் FactSeeker வினவிய போது, “கொழும்பு மாநகர சபையின் மேயராக நான் தெரிவு செய்யப்படுவதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கான வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆகவே, “கொழும்பு மேயராக சாகல ரத்னாயக்க நியமிக்கப்பட உள்ளார்” என சமூகவலைதளங்களில் பகிரப்படும் கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.