உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டியின் கீழ் நியாயம் கிடைக்குமென போலிச்செய்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை
by Anonymous |
ஏப்ரல் 16, 2024

இம்மாதம் (ஏப்ரல் 4ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் பங்குபற்றியிருந்தமை தொடர்பில் சமூக வலைதளங்களிலும், பிரதான ஊடகங்களிலும் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இதில், “உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமையவே யாழ் மாநாட்டிற்கு சென்றேன்”,என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்ததாக செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதையும்,
அதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் அழையாவிருந்தாளியாகவே கலந்துகொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் யாழில் வெளியாகும் தமிழ் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு பகிரப்படும் இவ்விரு செய்திகளின் உண்மைத்தன்மையை factseeker ஆராய்ந்து பார்த்தது.
இதில், உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமையவே யாழ் மாநாட்டிற்கு சென்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்ததாக கூறும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை எனவும், தேசிய மக்கள் சக்தி எந்தவொரு அரசியல்வாதியுடனோ அல்லது அரசியல் கட்சியுடனோ அவ்வாறான இணக்கப்பாட்டிற்கு வரவில்லை எனவும், எந்தவித வாக்குறுதிகளும் அவ்வாறு வழங்கப்படவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக மற்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரு தெரிவித்தனர்.
அதேபோல், தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்திற்கு அநுரகுமார திசாநாயக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தான் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராக இல்லை என தெரிவித்திருந்ததாகவும், கூட்டம் முடிந்தவுடன் சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ள சுமந்திரன் எம்.பி, கூட்டம் நிறைவடையும் என கூறப்பட்ட நேரத்தில் அங்கு சென்ற போதிலும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த காரணத்தினால் காத்திருந்து சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமையவே யாழ் மாநாட்டிற்கு சென்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என factseeker உறுதிப்படுத்துகின்றது.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் அழையாவிருந்தாளியாகவே கலந்துகொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள போதிலும் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மறுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக மூன்று தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயகவிடம் factseeker வினவியபோது, தமது அழைப்பின் பேரிலேயே சுமந்திரன் அன்றைய கூட்டத்திற்கு வருகை தந்ததாக உறுதிப்படுத்தினார். மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் இந்த விடயத்தை அறிந்திருக்காது அவ்வாறு ஒரு தவறான தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியினர் factseeker இடம் தெரிவித்தனர்.