ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

FactSeeker ஆய்வின் மூலம், ஈரானியக் கப்பல் குறித்து இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பேசியதாகப் பரவும் வைரல் வீடியோ ஒரு 'டீப்ஃபேக்' (Deepfake) என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
by Anonymous |
மார்ச் 11, 2026

ஈரானிய கடற்படைக் கப்பல் ஒன்றின் இருப்பிடத்தை இந்தியா இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாகவும், அதன் காரணமாகவே அந்த கப்பல் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் கூறி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இந்தத் தகவலை இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ‘ரைசினா டயலாக்’ (Raisina Dialogue) நிகழ்வில் தெரிவித்ததாக அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பின்வருமாறு தெரிவிக்கின்றார்:
Link : https://x.com/i/status/2030809702733692985
“நாங்கள் ஈரானின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இஸ்ரேல் எங்களது நெருங்கிய நட்பு நாடு. ஈரானிய கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அது சர்வதேச கடல் பகுதியில் நடந்தது. ஈரானிய கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் இருக்கும் வரை அவை பாதுகாப்பாக இருக்கும். ஆனால், அவை சர்வதேச எல்லைக்குள் நுழையும்போது, இஸ்ரேலின் மூலோபாய கூட்டாளி என்ற முறையில், புதிய ஒப்பந்தத்தின்படி அதன் துல்லியமான இருப்பிடத்தை இஸ்ரேலுக்குத் தெரிவிக்க வேண்டியது எங்களது கடமையாகும்.”என இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறுவதாக அமைந்துள்ளது.
மேலும் அந்த வீடியோவில், “ஈரானிய கப்பல்கள் இந்திய எல்லைக்குள் அழிக்கப்பட்டன என்று கருதுவது தவறு. சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் என்ன செய்கிறது என்பது அவர்களின் விருப்பம். நாங்கள் இஸ்ரேலுக்கு உளவுத் தகவல்களை வழங்கலாமே தவிர, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு டார்பிடோ (torpedo) தாக்குதலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. எங்களது கவனம் பாகிஸ்தான் மீதே உள்ளது. ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி பெற்றுத் தந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றும் அவர் கூறுவது போல் அந்தக் காணொளி மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த காணொளி குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் கருத்து தெரிவித்துள்ளார்,நேற்று (09/03/26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,” இந்திய இராணுவ பிரதானி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், இந்திய கடல் எல்லையில் ஈரானிய கப்பல் பயணிக்கும் வரையில் பாதுகாப்பு வழங்கிவிட்டு கப்பல் சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றவுடன் இந்தியாவுக்கும் -இஸ்ரேலுக்கும் இடையில் இருக்கும் உடன்படிக்கைக்கு அமைய குறித்த கப்பல் இருக்கும் இடம் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கியதாக அவர் கூறியுள்ளார். அதாவது தமது திருமண வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது அவர்களுடைய எதிரிக்கு ஒற்றுக்கொடுத்ததை போன்றது. இவ்வாறான கீழ்மட்டமான வேலையொன்று ஒரு நாட்டினால் செய்ய முடியுமா? இந்தியா ஈரானிய கப்பலுக்கு செய்த நாசகார வேலைக்கு இறுதியாக தலையிட வேண்டிய நிலைமை இலங்கைக்கே வந்தது. இந்தியாவின் இந்த செயல் தென்னாசிய வளையத்திற்கும் அவமானமாகும்” என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Link : https://www.youtube.com/watch?v=EN5_bTYzuJI
விமல் வீரவன்சவின் இந்த கருத்தை ஹிரு தொலைக்காட்சி செய்தியிலும், தினக்குரல் பத்திரிகையின் முதல் பக்கத்தில் செய்தியாக பிரசுரித்துள்ளது,

factseeker இன் உண்மைச் சரிபார்ப்பு
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறியதாக பகிரப்படும் இந்தக் காணொளி குறித்து factseeker, ஆரைந்து பார்த்ததில் இந்த விடியோ ஒரு ‘டீப்ஃபேக்’ (Deepfake) காணொளி என்பதை கண்டறிய முடிந்தது. இந்த காணொளிக்காக பயன்படுத்தப்பட்டுள்ள உண்மையாக காணொளி என்னவென factseeker ஆராய்ந்தது,
உண்மையான பின்னணி என்ன?
உண்மையான வீடியோவில், மார்ச் 7, 2026 அன்று நடைபெற்ற ‘ரைசினா டயலாக்’ நிகழ்வில், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) துணைத் தலைவர் ஹர்ஷ் வி.பந்துடன் ஜெனரல் உபேந்திர திவேதி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர் பாகிஸ்தானின் பாதுகாப்பு சவால்கள் மற்றும் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு நிலை குறித்து மட்டுமே இதில் கலந்துரையாடியுள்ளார்.
Link : https://www.youtube.com/live/MAYRb_PlYWk
இதன்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானின் நடத்தையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை என்றும், இந்தியா எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு மற்ற நாடுகளிடமிருந்து கிடைக்கும் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் இந்தியாவின் பாதுகாப்புத் திட்டமிடலில் முக்கிய கவலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாறாக ஈரானிய கப்பல் குறித்த எந்தவொரு காரணியும் இந்தக் கலந்துரையாடலில் இடம்பெற்றிருக்கவில்லை.
ஆகவே, இந்த காணொளியையே AI தொழிநுட்பத்தின் மூலமாக திரிபுபடுத்தி மக்களை குழப்பும் விதத்தில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளதுடன் போலியாக உருவாகப்பட்ட இந்த காணொளி பல்வேறு சமூக வலைதள கணக்குகளில் பகிர்ந்து வருகின்றனர். இவ்வாறு பகிரப்படும் காணொளிக்கு சமூக வலைதள பனர்கள் பலர் கருத்துக்களை பதிவிட்டும் அவற்றை பகிர்ந்தும் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இது குறித்து இந்தியாவின் உண்மை சரிபார்ப்பு அமைப்புகளில் ஒன்றான இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புக் குழு, இந்த வீடியோவை முற்றிலும் பொய்யானது என்றும், இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ‘டீப்ஃபேக்’ (Deepfake) வீடியோ என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
Link : https://x.com/PIBFactCheck/status/2030877643042955537?s=20
அதேபோல் டைம்ஸ் ஓப் இந்தியாவும் இவ்வாறு பகிரப்படும் போலி செய்தியை சுட்டிக்காட்டி செய்தி பிரசுரித்துள்ளது.
Link : https://x.com/globaltimesnews/status/2031237259983466808?s=20
ஆகவே சமூக வலைதளங்களில் ” ஈரானிய கடற்படைக் கப்பல் ஒன்றின் இருப்பிடத்தை இந்தியா இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாகவும், அதன் காரணமாகவே அந்த கப்பல் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும்” இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறியதாக பகிரப்படும் காணொளியானது முற்றுமுழுதாக AI மூலமாக போலியாக உருவாக்கப்பட்ட டீப்ஃபேக்’ (Deepfake) காணொளி என்பதையும், போலியான காணொளியொன்று ஆதாராமாக கொண்டே முன்னாள் அமைச்சர் விமன்ல் வீரவன்சவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.
