இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

சுகாதார அமைச்சினாலோ அல்லது தொற்றுநோயியல் பிரிவினாலோ இவ்வாறான புதிய வைரஸ் பரவுவதாக எந்தவித அறிவிப்புகளையும் விடுக்கவில்லை
by Anonymous |
மே 21, 2025

கொவிட் 19 வைரஸ் தொற்றின் JN.1 எனும் புதிய பிறழ்வு எனப் பெயரிடப்பட்ட வைரஸ் தெற்காசிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாக தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் இலங்கையிலும் பரவியுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும் பிரதான ஊடகங்களிலோ அல்லது சுகாதார அமைச்சினாலோ இவ்வாறான பரவல்கள் ஏற்பட்டுள்ளதாக எந்தவித அறிவிப்புகளையும் அவதானிக்க முடியவில்லை. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க factseeker தீர்மானித்தது.
இது குறித்து சுகாதார கல்வி பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவவிடம் வினவியபோது, இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் தொற்றுகள் பரவி வருவதாக தெரிவித்ததுடன், தொற்றுநோய் பரவல் காலப்பகுதியில் இருந்த ஒரு நோய் மீண்டும் ஒரு புதிய நோயாக அடையாளம் காணப்பட மாட்டாது எனவும், கொவிட் தொற்றுக்காலத்தில் கடைசியாக அடையாளம் காணப்பட்ட பிறழ்வு இன்னும் சமூகத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் இருப்பதாகக் கூறி பகிரப்படும் இந்தப் பதிவின் மூலத்தை ஆராயும்போது, அதன் உள்ளடக்கத்தில் இந்திய வைத்தியரான ரித்தேஷ் குமார் என்பவர் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்தே இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் மூலத்தை ஆராய்ந்தபோது Dr.Ritesh kumar , Pulmonologist எனும் facebook கணக்கின் ஊடாக கடந்த 2021.03.30 அன்று பதிவிடப்பட்டுள்ளது என்பதை அவதானிக்க முடிந்தது.
அதே செய்தி பகிரப்பட்ட பிற இடுகைகளையும் சமூக வலைதளங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இந்தச் செய்தியின் சிங்கள மொழிபெயர்ப்பே தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த செய்தி அண்மையில் வெளியிடப்பட்ட ஒன்றல்ல என்பது உறுதியாகின்றது.
இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் தற்போது கொவிட் புதிய பிறழ்வு எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
ஆகவே இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாகக் கூறி பகிரப்படும் இந்த செய்தியில் உண்மை இல்லை என்பதையும் இவ்வாறு பகிரப்படும் செய்தியானது பழைய செய்தி ஒன்றினை மூலமாகக் கொண்டது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.