அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

வைரலாகும் படத்தில் செய்தி வெளியான திகதி, செய்தியாளரின் பெயர் அல்லது இணையதள இணைப்பு எதுவுமில்லை
by Anonymous |
மார்ச் 24, 2026

அமெரிக்க அதிகாரிகள் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்க விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறிய கூற்றை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளதாக பொக்ஸ் நியூஸ் (Fox News) லோகோவுடன் கூடிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னணி
கடந்த 2026 மார்ச் 20ஆம் திகதி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜிபூட்டியில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்ததாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் இலங்கையின் நடுநிலைமையை அவர் இதன்போது வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை இங்கே காணலாம் : https://www.youtube.com/watch?v=pfSLMgETOOw&t=29184s
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதரகம் ஜனாதிபதியின் கருத்தை மறுத்ததாகக் காட்டும் வகையில், போக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தி அறிக்கை போன்ற ஒரு போலியான புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.
ஆய்வு மற்றும் ஆதாரங்கள்
1. அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ மறுப்பு எதுவும் இல்லை
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களை (X, Facebook, Instagram) FactSeeker ஆய்வு செய்தது. ஜனாதிபதியின் கூற்றை மறுக்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையும் தூதரகத்தினால் வெளியிடப்படவில்லை. ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ ஆட்சேபனையும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
2. போலியான போக்ஸ் நியூஸ் (Fox News) லோகோ
போக்ஸ் நியூஸ் ஊடகத்தின் டிஜிட்டல் ஆவணங்கள், ஒளிபரப்புப் பதிவுகள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் விரிவான தேடுதல் நடத்தப்பட்டது.
முடிவு: அமெரிக்கத் தூதரகம் அத்தகைய “மறுப்பு” எதனையும் வெளியிட்டதாக போக்ஸ் நியூஸ் செய்தி வெளியிடவில்லை.
புகைப்படம்: வைரலாகும் படத்தில் செய்தி வெளியான திகதி, செய்தியாளரின் பெயர் அல்லது இணையதள இணைப்பு எதுவுமில்லை. இது சர்வதேச ஊடகத்தின் நற்பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு போலியான (Fabricated) படமாகும்.
3. நம்பகமான சர்வதேச ஊடகங்களின் செய்திகள்
The Hindu, Al Jazeera மற்றும் India Today போன்ற பல முன்னணி சர்வதேச ஊடகங்கள் ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரையை செய்தியாக வெளியிட்டிருந்தன. ஆனால், அவற்றில் எதிலும் அமெரிக்கத் தூதரகம் ஜனாதிபதியின் கருத்தை மறுத்ததாகக் குறிப்பிடப்படவில்லை.
முடிவு
சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்தப் புகைப்படம் முற்றிலும் போலியானது. ஜனாதிபதியின் கூற்றை அமெரிக்கத் தூதரகம் மறுத்ததற்கோ அல்லது போக்ஸ் நியூஸ் அது தொடர்பாக செய்தி வெளியிட்டதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் லோகோக்களைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
