முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனத்தை மாநகர சபையிடம் ஒப்படைத்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ரோசி சேனாநாயக்க மேயராக கடமையாற்றிய போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வீடு மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் ஆகியவை இன்னும் கையளிக்கப்படவில்லை என லங்கா சி நியூஸ் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் FactSeeker வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாநகர சபையின் பதவிக்காலம் மார்ச் 19ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, மார்ச் 20 அல்லது 21ஆம் திகதிகளில் ரோஸி சேனாநாயக்க தனது உத்தியோகபூர்வ காரை ஒப்படைத்ததாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார்.
பத்ராணி ஜயவர்தன மேலும் தெரிவிக்கையில், முன்னாள் மேயர் தனது தனிப்பட்ட இல்லத்தில் திருத்த வேலை காரணமாக மே 16 வரை உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு மேல் மாகாண ஆளுநரிடம் அனுமதி பெற்று தற்போது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடமைகளை அகற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.