கடனை மறுசீரமைப்பதில் இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், சீன அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளதாக சண்டே டைம்ஸ் வார இதழ் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி பிரசுரித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த சலுகைக்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
“இந்தக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு (EFF) சீனாவின் ஆதரவையும் விரிவுபடுத்துகிறது எனவும் அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு வழிவகுக்கும் கடன் மறுசீரமைப்பு பற்றிய விவாதங்களை முன்னோக்கி கொண்டு செல்லுமாறு சர்வதேச நாணய நிதியத்தை கேட்டுக்கொள்கிறது” என குறித்த வார இதழ் தெரிவித்துள்ளது.
அதேநேரம், சீனத் தூதரகத்தில் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அசல் கடிதம் என கூறி, அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் பல நாட்களாகப் பகிரப்பட்டு வருகிறது.எனினும், இது குறித்து டுவிட்டர் தளத்தில் தெளிவுபடுத்தியுள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம், தனது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ் பகிரப்பட்டுவரும் கடிதமானது போலியான ஆவணம் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், “தயவுசெய்து உத்தியோகபூர்வ தகவல் ஆதாரங்களைப் பின்பற்றவும்” எனவும் சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளதைப் போன்றோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு கோரிக்கை குறித்த செய்திகள் தொடர்பில் சீன அரசாங்கம் இன்னும் பகிரங்கமாக தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
மேலும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு இருதரப்பு கடன் வழங்கும் முக்கிய நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.