உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு இரண்டு தடவைகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளமையானது பலத்த விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இவ்வேளையில் தேர்தலை நடத்துவதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன இருவருக்கும் பெரியளவில் ஈடுபாடு இல்லை என ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக உள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களான அகிலவிராஜ் காரியவசம் மற்றும் ரங்கே பண்டார ஆகியோர், இந்த நேரத்தில் தேர்தலொன்றுக்கு அவசியமில்லை என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழலில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியொன்றின் தலைவர், சட்டமா அதிபருடன் இணைந்து தேர்தல் ஆணைக்குழுவைக் கூட்டுவதும், அந்த அழைப்பிற்கு தேர்தல் ஆணைக்குழுவும் சம்மதத்தை வெளிப்படுத்துவதுமானது சட்டம் மற்றும் தார்மீக ரீதியிலும் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டபூர்வமான தன்மை
1978 அரசியலமைப்பிற்கு அமைய, 33 ஆ சரத்தின் படி, தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான பின்னணி மற்றும் வசதிகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுடன் கையாள்வதற்கான அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கு உண்டு.
அதுமட்டுமல்லாமல், அரசியல் அமைப்பின் 19,20 மற்றும் 21வது திருத்தங்களுக்கு அமையவும் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்கவின் கருத்துப்படி, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் கூட ஆணைக்குழுவின் சுயாதீனம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த போதிலும், 21ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது அதற்கான சரத்தை நீக்கி, ஆணைக்குழுவை பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் நிறுவனமாக மாற்றியது. ஆனால், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், ஜனாதிபதி ஒருவர் ஆணைக்குழுவை அழைத்து ஆலோசனை வழங்குவது, தனது தேர்தல் கண்காணிப்பு வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு நிகழ்வு என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தேர்தல் ஆணைக்குழுவிற்குள் சர்ச்சைக்குரிய செய்திகளை உருவாக்குவதாக குற்றம் சுமத்திய மஞ்சுள கஜநாயக்க, “தாராளவாத மற்றும் ஜனநாயக தலைவர்” எனக் கூறப்படும் ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வாறான செயற்பாடொன்றை செய்திருக்கவே கூடாது என FactSeeker க்கு தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திப்பது எவ்வளவு பொருத்தமானது?
பல மூத்த சட்டத்தரணிகள் மற்றும் ஓய்வுபெற்ற மூத்த நிர்வாக அதிகாரிகள் சிலர் FactSeeker உடன் பேசுகையில், ஆணைக்குழுவை அழைக்க ஜனாதிபதிக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது, ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியொன்றின் தலைவரான ஜனாதிபதியை சந்திக்க ஆணைக்குழு மறுத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
கடந்த பொதுத் தேர்தலில் தனது தொகுதி உற்பட தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க, சட்டப்பூர்வமாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போதும், மக்கள் ஆணையற்ற அரச தலைவராக இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே ஜனாதிபதி பதவியின் சட்டபூர்வமான தன்மையில் எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும் கூட, அதன் நேர்மைத்தன்மையில் சிக்கல் உள்ளது.
ஊடகத்துறை அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெருமவின் அழைப்பை ஒரு சந்தர்ப்பத்தில் தகவல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நிராகரித்ததை உதாரணமாக நினைவுகூர்ந்த ஆய்வாளர் ஒருவர், தகவல் ஆணைக்குழுவை விட தேர்தல்கள் ஆணைக்குழு மிகவும் சுயாதீனமானதும் சக்தி வாய்ந்ததுமான நிறுவனம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அறிந்துகொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவை தொடர்புகொண்ட போதிலும் அவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாது போயிருந்தது.
சட்டமா அதிபரின் பணி
சட்டமா அதிபரின் கருத்துக்களைக் கேட்குமாறும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள நிலையில், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் நடவடிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்த அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, தற்போதைய சட்டமா அதிபரின் பணியானது வழக்குகளை தாக்கல் செய்வதை விட வழக்குகளை வாபஸ் பெறுவதாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக, சட்டமா அதிபரின் பக்கச்சார்பான நடவடிக்கை காரணமாக, அரசாங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் உள்ள சட்டமா அதிபர் பதவிக்குப் பதிலாக சுயாதீனமான வழக்குத் தொடருனர் அலுவலகத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தை சட்ட நிபுணர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
முடிவுரை
தேர்தல் ஒன்று நடத்தப்படும் சந்தர்ப்பத்தில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஒரு கட்சித் தலைவர் சந்திப்பில், ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை மற்றும் தேர்தலின் சுயாதீனம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே, நாட்டின் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் கூட, ஆணைக்குழு அவ்வாறான சந்திப்புகளைத் தவிர்த்து சுயாதீனமாகச் செயற்படுவது மிகவும் ஜனநாயக நடைமுறையாக அமையும்.