Nolimit இன் வாடிக்கையாளர்கள் 30,000 ரூபாய் பணப் பரிசை வெல்லலாம் என வாட்ஸ்அப்பில் பரவி வரும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியில் உள்ள இணைப்பை அணுகிய பிறகு, திரையில் தோன்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூலமான நான்கு கேள்விகளுக்கு பயனர்கள் பதிலளிக்க வேண்டும். நான்கு கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு, ஒன்பது பரிசுப் பெட்டிகள் தோன்றும். அதில் பயனர்கள் சரியான பரிசுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவார்கள்.
சமூக ஊடகப் பயனர்கள் சரியான பரிசுப்பெட்டியைத் தேர்வுசெய்தால், வெற்றி பெற்ற பரிசைப் பெற வேண்டுமாயின் அது தொடர்பான செய்தியை வாட்ஸ்அப் அல்லது மெஸ்சென்ஜர் வழியாக 20 நண்பர்கள் அல்லது 5 நண்பர் குழுக்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவை முடிக்க பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுமாறும் கோரப்படுவர்.
மேற்கூறிய செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக நாம் மேற்கொண்ட தொழில்நுட்ப ஆய்வின் போது, Nolimit இன் அதிகாரபூர்வ Facebook பக்கத்தில், புழக்கத்தில் உள்ள செய்தியுடன் தமது நிறுவனத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதோடு அதை அணுகுவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்திய பதிவை காணமுடிந்தது.
மேலும், இதில் கருத்துத் தெரிவித்தவர்களின் பெயர்கள் (பரிசுகள் வழங்கப்பட்டதாகக் கூறி) வெளிநாட்டவர்களின் பெயர்களாக இருந்த அதேவேளை இலங்கையர்களின் பெயர்கள் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.
எனவே, Nolimit இன் வாடிக்கையாளர்கள் 30,000 ரூபாய் பணப் பரிசை வெல்லலாம் என வாட்ஸ்அப்பில் பரவி வரும் செய்தி போலியானதாகும்.