இலங்கை வங்கி “பவுண்டேஷன் கிராண்ட்ஸ் போனஸ்” என்ற போட்டியை நடத்துவதாக பரவும் செய்தி போலியானது!
இலங்கை வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட “பவுண்டேஷன் கிராண்ட்ஸ் போனஸ்” என்ற போட்டியைப் பற்றிய ஒரு செய்தி வாட்சப்பில் தற்போது புழக்கத்தில் உள்ளது.
செய்தியில் உள்ள இணைப்பானது பல கேள்விகளைக் கொண்ட திரைக்கு செல்ல வழிசெய்கிறது. வினாக்களுக்கு பதிலளித்ததும் பயனர்கள் எழுந்தமானமாக தேர்ந்தெடுக்க ஒன்பது பரிசுப் பெட்டிகள் திரையில் காட்டப்படும்.
பரிசு அடங்கிய பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த செய்தியை வாட்சப் அல்லது மெஸ்சேன்ஜ்ர் மூலம் 5 நண்பர் குழுக்கள் அல்லது 20 நண்பர்கள் வரை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு இப்பதிவை முடித்து பரிசைப் பெறுவதற்கு தனிப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்படி செய்தியை சரிபார்க்க நாம் மேற்கொண்ட தொழில்நுட்ப ஆய்வில், இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை நாம் கண்டோம்.
“இலங்கை வங்கி இது போன்ற போட்டிகளையோ அல்லது வாக்களிப்பையோ நடத்தாது என்றும், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும் எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்! “ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, “பவுண்டேஷன் கிராண்ட்ஸ் போனஸ்” என்ற போட்டி குறித்து புழக்கத்தில் உள்ள செய்தி போலியான செய்தி என இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது.