“கொழும்பில் உள்ள அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்த ஒரு ஜோடி பாதணிகள் தொடர்பான காணொளி வெளியீட்டிற்கு பின், இலங்கை அரசாங்கம் அமெரிக்க விளையாட்டு ஆடை நிறுவனமான ‘நைக்’க்கு முறையிட்டது” எனும் தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்துடனான ஒரு ஜோடி வெள்ளைநிற காலணிகள் பொதியை பிரிக்கும் காணொளியொன்று “தமிழ் கார்டியன்” யூடியூப் அலைவரிசையில் கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதே காணொளியானது, குறித்த அதே தினத்தில் “தமிழ் கார்டியன்” அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது.
மூலம் – https://www.youtube.com/watch?v=0ZsUA6uaZiE&t=21s
மூலம் – https://twitter.com/TamilGuardian/status/1421484449489899528
காணொளியில் உள்ள இந்த வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலான காலணியின் முன்புறத்தில் விடுதலைப் புலிகளின் சின்னத்தைக் கொண்டுள்ளதுடன், விடுதலைப் புலிகளின் கொடியுடன் துப்பாக்கிகளை ஏந்திய இரண்டு வீரர்களை காலணியின் வெளிப்புற கணுக்கால் பகுதியில் கொண்டுள்ளது. காலணியின் பின்புறத்தில் உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்ற பகுதிகளைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட இலங்கை வரைபடம் உள்ளது.
இந்த செய்தி உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான “NIKE, Inc” யின் கவனத்தை ஈர்த்தது. அத்தோடு இலங்கை வெளியுறவு அமைச்சின் கவனத்தையும் ஈர்த்தது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ விசாரணையின்படி, NIKE, Inc. நிறுவனம் புலிகளின் அடையாளங்களைக் கொண்டிருக்கும் அத்தகைய காலணி தயாரிப்பை உற்பத்தி செய்யவில்லை என்றும், புலமைச்சொத்து துஷ்பிரயோகம் குறித்த இந்த விவகாரத்தை அந்நிறுவனம் விசாரித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், NIKE, Inc. இன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அத்தகைய காலணி தயாரிப்பு எதுவும் காட்டப்படவில்லை.
எனவே, புலிகளின் அடையாளத்துடன் கூடிய ஒரு ஜோடி காலணி NIKE, Inc. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாக புழக்கத்தில் உள்ள காணொளி போலியானது என்பது உறுதியாகிறது. அத்தோடு இன வெறுப்பை தூண்டும் நோக்கத்துடனேயே இது வெளியிடப்பட்டுள்ளமை நிரூபணமாகிறது.